கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

தமிழ்நாடு நாள், எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்: இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான் - தங்கம் தென்னரசு

இனம், மொழி, பண்பாடு காத்தவர் தலைவர் மு.க.ஸ்டாலின் என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

சென்னை,

மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்ட பேரறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ம் நாளையும் அரசு கொண்டாடும் என்று தெரிவித்து முதல்-அமைச்சர் விஜய் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவரது பதிவை குறிப்பிட்டு இந்த இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

இந்த இரண்டையுமே செய்தது தி.மு.க. அரசுதான்.

தமிழ்நாடு நாள் இன்று (ஜூலை 18) கொண்டாடப்படுவதற்குக் காரணம் என்ன?

நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது பொருத்தமற்றது என்று பல்வேறு அறிஞர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாக எவ்வாறு கொண்டாட முடியும்? அந்த நாளில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ்நாடு பெற்றதைவிட இழந்ததே அதிகம். எனவே, அந்த நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது சரியல்ல என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், அன்னைத் தமிழ்நாட்டிற்கு "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்டுவதற்காகத் தியாகி சங்கரலிங்கனார் உயிர்நீத்ததும், எண்ணற்றோர் போராடியதும் வரலாறு. "பெயரில் என்ன இருக்கிறது?" என்று தமிழினத்திற்கான தனித்துவமான அடையாளத்தை வழங்க மறுத்த ஆதிக்க மனப்போக்கிற்கு எதிராகப் போராடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசுதான் இந்த மாநிலத்திற்கு "தமிழ்நாடு" என்ற பெயரைச் சூட்டியது.

அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவது தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் என்று கருதிய முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஜூலை 18-ம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட ஆணையிட்டார்.

அதே நேரத்தில், தமிழ்நாட்டின் எல்லைகளைக் காக்க இன்னுயிர் நீத்துப் போராடிய தியாகிகளைப் போற்றும் வகையில் நவம்பர் 1-ம் தேதியை "எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்" என அறிவித்ததுடன், அவர்களுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தினார். இனம், மொழி, பண்பாடு காத்தவர் நம் தலைவர்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.