சென்னை,
தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜுலை 18ஆம் நாள் ‘’தமிழ்நாடு நாள் விழா’’வாக சென்னை, தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவன அரங்கத்தில் பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றம் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-
தமிழ்நாடு நாள் விழாவின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன், வரவேற்புரை ஆற்றினார். பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவில் நடத்தப்பெற்ற கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்டம் ரா. நந்தனா என்ற மாணவிக்கு ரூ.50,000/-க்கான காசோலை, பாராட்டு சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற தேனி மாவட்டம் ர.பா.தனுஸ்ரீ என்ற மாணவிக்கு ரூ.30,000/- க்கான காசோலை, பாராட்டு சான்றிதழும் மூன்றாம் பரிசு பெற்ற திருவண்ணாமலை மாவட்டம் பா. ஐஸ்வர்யா என்ற மாணவிக்கு ரூ.20,000/-க்கான காசோலை, பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.
பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற திருவாரூர் மாவட்டம் பி. கிஷோர் என்ற மாணவனுக்கு ரூ.50,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் இரண்டாம் பரிசு பெற்ற கடலூர் மாவட்டம் பா. வர்ஷா என்ற மாணவிக்கு ரூ.30,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் மூன்றாம் பரிசு பெற்ற மயிலாடுதுறை மாவட்டம் க. மனிஷா என்ற மாணவிக்கு ரூ.20,000/- க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழும் வழங்கி விழா பேருரையாற்றினார்.
தமிழ் வளர்ச்சி துறையின் இயக்குநர் ந. அருள் நன்றியுரை ஆற்றினார்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.