சென்னை,
அகில இந்திய காவல் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களுக்கு தமிழக டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழக டிஜிபி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
2026-ம் ஆண்டிற்கான 11-வது அகில இந்திய காவல் ஜூடோ குழு போட்டிகள் (ஜூடோ, டேக்வாண்டோ, வூஷு, பென்காக் சிலாட் & கராத்தே), கடந்த மாதம் 23.07.2026 முதல் 30.07.2026 வரை தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் தமிழக காவல்துறை சார்பில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஆக மொத்தம் 67 நபர்கள் இந்த 5 பிரிவுகளிலும் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டிகளில் 1-வெள்ளி மற்றும் 12-வெண்கல பதக்கங்கள் உட்பட மொத்தம் 13 பதக்கங்களை பெற்று தமிழ்நாட்டிற்கும், தமிழக காவல்துறைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மேற்கண்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளை தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/ படைத்தலைவர் மகேஷ் குமார் அகர்வால் (இன்று 17.08.2026) நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.