தமிழக செய்திகள்

"தமிழ்நாட்டிற்கு என்.எல்.சி தேவையில்லை, நிலத்தை மேலும் கையகப்படுத்த அனுமதிக்க கூடாது" - சவுமியா அன்புமணி

நிதி நெருக்கடி இருக்கும் இந்தச் சூழலில் அனைத்து மாவட்டங்களுக்கும் தடுப்பணைகளை கட்டிக் கொடுக்க சொல்லுங்கள் என்று சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

சென்னை,

என்.எல்.சி. ஏற்கனவே 40 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அழித்துவிட்டது என்றும், மேலும் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முயற்சி செய்வதாக பாமக சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி தெரிவித்தார்.

NLC நிறுவனம்

இதுகுறித்து சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகைள் மீதான விவாதத்தின் போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை 21 ஆயிரம் மெகாவாட். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரசு துறைகளில் 36 ஆயிரம் மெகாவாட் உள்ளது. நாம் மின் மிகை மாநிலமாக மாறிவிட்டோம். இதில், NLC-யின் பங்கு 2 ஆயிரம் மெகாவாட் மட்டுமே. ஆகையால், நமக்கு NLC தேவையில்லை. NLC நிறுவனம் தனது CSR நிதி முழுவதையும் வடமாநிலங்களுக்குத்தான் வழங்குகிறது. CSR நிதியைப் பயன்படுத்தி தமிழகத்தில் தடுப்பணைகள் அல்லது நெல் குடோன்கள் கட்டித் தர வேண்டும்.

பூட்டு போடும் போராட்டம்

ஏற்கனவே 40,000 ஏக்கர் நிலத்தை அவர்கள் அழித்துவிட்டு, இரவோடு இரவாக அங்கிருந்த மக்களை ‘விஜயமாநகரம்’ என்ற இடத்தில் தங்க வைத்து, மூட்டை முடிச்சுகளுடன் அகதிகளாகச் செல்ல வைத்தனர். அவர்களுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை இருக்கும்போது, மேலும் 60,000 ஏக்கர் நிலத்தை எடுக்க என்.எல்.சி. நிர்வாகம் தயாராகி வருகிறது; அதற்குப் பயங்கர முனைப்புடன் செயல்பட்டது.

அந்த சமயம் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி அனைவரையும் அழைத்துச் சென்று என்.எல்.சி. நிறுவனத்திற்குப் பூட்டு போடும் போராட்டை நடத்தினார். அப்போது வஜ்ரா வாகனத்தைக் கொண்டு அந்தப் போராட்டத்தை அடக்க முயற்சிகள் நடந்தன; அனைத்தையும் மீறி பெரிய போராட்டங்கள் நடைபெற்றன. எனவே, மேலும் 60,000 ஏக்கர் நிலத்தை எடுப்பதற்குத் கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது என்பதைத் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அங்கு இளநீரில் கூட நச்சுத்தன்மை (டயாசின்) இருக்கிறது.

இவ்வாறு சவுமியா அன்புமணி ஆவேசமாக தெரிவித்தார்

தி.மு.க. அரசு

இதனைத் தொடர்ந்து பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ கணேசன், “என்.எல்.சி.யில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் இருப்பார்கள். அவர்களுக்கு இங்கு வெளியில் நடக்கும் போராட்டம் என்ன என்பது குறித்து பெரும்பாலும் தெரியாது. முதல்-அமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நான் இருந்த போது என்.எல்.சி. அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கலந்து பேசி, நிலம் கொடுத்த விவசாயிகளுக்குக் கிடைக்க வேண்டிய கூடுதலான தொகையைப் பெற்றுக்கொடுத்தது தி.மு.க. அரசு. அதேபோல, ஆண்டிற்கு ரூ. 100 கோடி சி.எஸ்.ஆர். நிதியைப் பெற்றுக்கொடுத்ததும் தி.மு.க. அரசுதான்” என்றார்.

அரசாங்கம் கைவிடாது

இதனையடுத்து பேசிய தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, “பரந்தூர் மக்களை எப்படி நாம் பாதுகாத்தோமோ, அதேபோல் என்.எல்.சி. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் நமது அரசாங்கம் கண்டிப்பாக கைவிடாது. ஆனால், நான் ஒன்றை மட்டும் கேட்டுக்கொள்கிறேன் .. என்.எல்.சி. நிறுவனம் யாருடைய நிறுவனம்? அது மத்திய அரசாங்கத்தின் நிறுவனம். நாங்கள் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றன; இந்த நேரத்தில் என்.எல்.சி. வரவில்லை. இது பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்சினை. இன்று கூட்டணியில் யார் இருக்கிறார்கள்? அவர்களும் மத்திய அரசிடம் பேசி தமிழ்நாட்டிற்கான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாமே! உயர்மட்ட குழு கேட்டுள்ளனர். கண்டிப்பாக நமது முதல்-அமைச்சர் அங்கிருக்கும் மக்களை கைவிட மாட்டார்.” என்று கூறினார்.