சென்னை,
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”மேகதாது அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக ரயிலில் சென்ற தமிழ்நாட்டு விவசாயிகளை நாக்பூரில் கைது செய்துள்ள மகாராஷ்டிரா மாநில காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேகதாது விஷயத்தில் தொடக்கம் முதலே கர்நாடகாவுக்கு ஆதரவாக ஒருதலைபட்சமாக செயல்படும் நீர்வளத்துறையின் போக்கை கண்டித்துதான் தமிழ்நாட்டு விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தனர்.
ஆனால், அவர்கள் ரயிலில் சென்று கொண்டிருக்கும் போதே நடுவழியில் இறங்க வைத்து, தமிழ்நாட்டுக்கே திரும்பிச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தி உள்ளது மகாராஷ்டிர காவல்துறை.
நாக்பூரில் கைது செய்யப்பட்டுள்ள நம் விவசாயிகளை உடனே விடுவிக்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நம் விவசாயிகளை கைது செய்த மகாராஷ்டிர அரசிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்பதுடன், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கான உறுதியைப் பெற வேண்டும். டெல்லி சென்று போராட அவர்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். ஜனநாயக வழியில் போராடும் உரிமையைப் பறிக்கக் கூடாது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.