தமிழக செய்திகள்

மீனவர்களின் படகுகள் ஏலம்: "இலங்கையின் உண்மை முகத்தை இந்தியா அறிய வேண்டும்" - டாக்டர் ராமதாஸ்

தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசு அறிவித்ததற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.

அவ்வாறு தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு அரசுடைமையாக்கி உள்ளது. இந்நிலையில் அந்த படகுகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இலங்கை அரசின் இந்த அறிவிப்பிற்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

தமிழ்நாட்டு மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நாட்டுப்படகு, விசைப்படகு உள்ளிட்ட 105 படகுகள் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல் ஏலத்தில் விடப்படவிருப்பதாக இலங்கை அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கான உரிமை இலங்கை அரசுக்கு இல்லை.

இந்தியாவிடமிருந்து இலங்கை ரூ.18,090 கோடி கடன் வசதி பெற்றுள்ளது. உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல. இலங்கையின் உண்மை முகத்தை இந்தியா அறிய வேண்டும்.

மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டால் அவர்களின் படகுகளையும் ஒப்படைக்க இலங்கை கடந்த காலத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்