சென்னை,
தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தப்படும் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
46 ஆண்டுகால கோரிக்கையான சமூகநீதி கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்த தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக காத்திருக்காமல் உடனடியாக சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தி 46 ஆண்டுகால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றிடவேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக அரசின் நடப்பாண்டுக்கான கொள்கை ஆவணமான தமிழக கவர்னர் ஆர்.வி.ஆர்லேகர் உரையில் எதிர்பார்த்த அளவிற்கு திட்டங்களோ, அறிவிப்புகளோ இல்லை. சட்ட ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு எடுக்கப்பட உள்ள நடவடிக்கை குறித்து எவ்வித அறிவிப்பும் செய்யவில்லை. போதை பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்கான திட்ட முன்வரைவுகள் குறித்து எவ்வித அறிவிப்பும் இடம் பெறவில்லை. பூரண மதுவிலக்கு குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாதது பெருத்த ஏமாற்றமே.
தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் ஏதும் சொல்லப்படவில்லை. காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே திருவோம் என கொக்கரிக்கும் கர்நாடக காங்கிரஸை கண்டிக்கும் வகையில் ஒரு வாக்கியம்கூட இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் காலியாக உள்ள சுமார் 5 லட்சம் அரசுப் பணிகளை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.
தமிழ்நாட்டில் சமூகநீதி கணக்கெடுப்பை நடத்தப்படும் அறிவிக்கப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதே நேரம் மத்திய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக காத்திருக்காமல் உடனடியாக சமூகநீதி கணக்கெடுப்பை நடத்திடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.