சென்னை,
பால் கொள்முதல் விலையை தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை ரூபாய் 48 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்கள், பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூபாய் 38 லிருந்து 41 ஆக அதிகரிக்கப்படும் என அறிவித்தார். இது வரவேற்பிற்குரியது என்றாலும் கூட, பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.48 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரி போராடி வருகின்றனர்.
எனவே, மூன்று லட்சத்திற்கு மேற்பட்ட பால் உற்பத்தியாளர்களின் பொருளாதார நலனை, வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உடனடியாக பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூபாய் 48 ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தி வழங்கிட வேண்டும்.
அதே சமயம் நுகர்வோருக்கு பாலின் விலையை அதிகரித்துவிடக்கூடாது. அதற்கேற்ப உரிய மானியங்களை தமிழ்நாடு அரசு ஆவின் நிறுவனத்திற்கு வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.