தமிழக செய்திகள்

‘மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இன்று உண்ணா நிலை அறப்போராட்டம் சிவகாசியில் நடைபெறுகிறது.

சென்னை,

மூடப்பட்டுள்ள பட்டாசு உற்பத்தி ஆலைகளை திறக்கவும், பட்டாசு தொழிலை பாதுகாக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“நாட்டின் மொத்த பட்டாசு உற்பத்தியில் 90 விழுக்காடு  பங்களிப்பையும், ரூ 6,000 கோடிக்கும் அதிகமான வருடாந்திர வணிகத்தையும், 10 லட்சம் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பையும் வழங்கக் கூடியது விருதுநகர் மாவட்ட, சிவகாசி பட்டாசு தொழில். அதை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இம்மாவட்டத்தில் 1100 பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கிவந்தன. அவற்றில் 200 ஆலைகள் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்ற காரணங்களைக் கூறி மூடப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். அண்மையில் நிகழ்ந்த விபத்துகளைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்பதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் மட்டும், இப்பகுதியில் பட்டாசு விபத்துகளில் 169 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மற்றும் மாநில அரசுகள், பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை (ஷிளிறிs) மேம்படுத்தவும், சட்டவிரோத ஆலைகளை அகற்றவும், தகுதியான தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இது வரவேற்பிற்குரியன.

இருப்பினும், மூடப்பட்டுள்ள ஆலைகளை மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தி, பாதுகாப்பு விதிமுறைகளை நிறைவு செய்துள்ள ஆலைகளை மீண்டும் திறந்திட உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். எதிர்காலத்தில் எத்தகைய விபத்துகளும் ஏற்பட்டுவிடாமல் தடுத்திட அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும்.

தொழில் பாதுகாப்பு என்ற பெயரில் தொழிலாளரின் உயிர் அச்சுறுத்தலுக்கு ஆளாகிவிடக் கூடாது. அதே சமயம் தொழிலும் முக்கியம். “தொழில் முக்கியம் ; தொழிலாளரின் உயிர் மிக மிக முக்கியம்“  என்ற புரிந்துணர்வோடு அரசு செயல்பட வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், இன்று (17.08.2026) உண்ணா நிலை அறப்போராட்டம் சிவகாசியில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக கோரிக்கைகளை ஏற்று பட்டாசு தொழிலை பாதுகாக்க, மூடிய தொழிற்சாலைகளை அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்து மீண்டும் திறக்க நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழ்நாடு அரசையும், ஒன்றிய அரசையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.