தமிழக செய்திகள்

செந்தில் பாலாஜி மீதான வழக்கை நடத்த அமலாக்கத்துறைக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்

தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி 2011-15 காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றினார்.

சென்னை,

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக்கூறி அப்பாவி இளைஞர்களிடம் மோசடியாக வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமான பரிமாற்றம் செய்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்திருக்கிறது. அரசு நிர்வாகத்தில் தூய்மையை ஏற்படுத்தும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

திமுகவைச் சேர்ந்த தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி 2011-15 காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பணியாற்றிய காலத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர், தொழில்நுட்பப் பணியாளர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளை வழங்குவதாக கூறி பல்லாயிரக்கணக்கானோரிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து ஏமாற்றியதாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது, இந்த வழக்கின் விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு, வேலைவாய்ப்பு மோசடி மூலம் கிடைத்த பணத்தை சட்டவிரோத பரிமாற்றம் செய்ததாக செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து, அந்த வழக்கு சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 410 நாள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனாலும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அரசின் அனுமதி அவசியம் என்பதாலும், செந்தில் பாலாஜி மீது வழக்குத் தொடர முந்தைய திமுக ஆட்சியில் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதாலும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்னும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்க முடியவில்லை.

செந்தில் பாலாஜி மீதான வழக்கின் விசாரணைக்கு அனுமதி கோரி கடந்த ஆண்டு மே 14-ஆம் தேதி அப்போதைய கவர்னர் ஆர்.என். ரவி அவர்களிடம் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி அரசிடம் தான் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறி அமலாக்கத்துறையின் கோரிக்கையை முந்தைய அரசு நிராகரித்து விட்டது. அதைத் தொடர்ந்து தான் இப்போது அமலாக்கத்துறை தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உரிய ஆதாரங்களுடன் கடிதம் அனுப்பியுள்ளது.

போக்குவரத்துக் கழகங்களில் வேலை வழங்குவதாகக் கூறி ஆயிரக்கணக்கானோரிடம் பணம் வாங்கியதை செந்தில் பாலாஜியே ஒப்புக் கொண்டிருக்கிறார். அவ்வாறு பாதிக்கப்பட்ட பலருக்கு நேரடியாக பணத்தை திருப்பிக் கொடுத்ததாகவும் உயர்நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசடி மூலம் கிடைத்த பணத்தை செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தகைய குற்றங்களைச் செய்த ஒருவர், திமுக அரசால் உருவாக்கித் தரப்பட்ட பாதுகாப்புப் போர்வையை பயன்படுத்திக் கொண்டு தப்பிப்பதை அனுமதிக்கக்கூடாது.

முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான தமிழக அரசின் நிலைப்பாடும் இத்தகையதாகவே உள்ளது. லஞ்சத்திற்கு எதிராக ஜீரோ சகிப்புத் தன்மையுடன் த.வெ.க. அரசு செயல்படும் என்று அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் 87-ஆம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு செயல்வடிவம் தரும் வகையில் செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற விசாரணையைத் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.