சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. அதிலும் தமிழக அரசு மின்னல் வேகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுவருவது பாராட்டுதலுக்கு உரியது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் ஆணையை ஏற்று அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமாக வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்களை வணிகர்கள் மூடி வைத்துள்ளனர்.
வருகிற 31-ந்தேதி வரை அரசு ஆணையை பின்பற்றி ஒத்துழைக்கவும், அதன்பிறகு அரசு மேற்கொள்ளும் முடிவுகளுக்கு கட்டுப்படவும் வணிகர்கள் தயாராக உள்ளனர். தமிழகத்தில் பல இடங்களில் சிறிய அளவிலான வணிக வளாகங்களையும், வணிக நிறுவனங்களையும் மூடுமாறு வற்புறுத்தி வருவதாக அறிகிறோம். இதுகுறித்த ஒரு தெளிவான உத்தரவை அரசு பிறப்பிக்கவேண்டும்.
அரசின் உத்தரவை ஏற்று வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்படுவதால் வணிகர்கள் பெரும் இழப்பை சந்திக்கவேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. இதனால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால நீட்டிப்பு, வங்கி அல்லது கடனுக்கான தொகைகளை செலுத்த கால நீட்டிப்பு உள்ளிட்ட நிவாரணம் அளிக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.