தமிழக செய்திகள்

தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம்: மனநல ஆலோசனைகள் பெறலாம்

டெலி கவுன்சிலிங் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்று கொள்ளலாம்.

சென்னை,

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 6-ந் தேதி வரை நடந்தது. இந்த தேர்வை 8 லட்சத்து 82 ஆயிரத்து 806 பள்ளி மாணவர்களும், 13 ஆயிரத்து 744 தனித்தேர்வர்களும் என மொத்தம் சுமார் 9 லட்சம் பேர் எழுதினர்.

இதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. இப்பணிகள் சமீபத்தில் முடிவடைந்தன. இதைத்தொடர்ந்து மாணவ- மாணவிகள் பெற்ற மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றும் பணி தீவிரமாக நடைபெற்றது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20-ந் தேதி (நாளை) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகளை பள்ளிக்கல்வி, தேர்வுத்துறை அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், திட்டமிட்டபடி, நாளை (20-ம் தேதி) 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு (2025-26) பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026-ம் (நாளை) தேதியன்று வெளியிடப்படுகிறது. இந்த நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சார்பில் தமிழ்நாடு அரசின் நட்புடன் உங்களோடு திட்டத்தில் மனநல ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 14416 அல்லது 104 அழைக்கவும்.

மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் “நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, ‘டெலி கவுன்சிலிங்’ (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.