சென்னை,
தமிழக ஆளுநர் அர்லேகரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி வெங்கட நாரயணா இன்று சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தெரிகிறது. ஆளுநரை வெங்கட நாராயணா சந்தித்த புகைப்படங்களை ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆளும் தவெக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஆளுநரை சந்தித்து திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் புகார் அளித்தனர். ஒரே நாளில் அடுத்தடுத்து இரு கட்சிகளும் புகாரளித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில்தான்,தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதிமுக எம்.எல்.ஏக்கள் 6 பேர் இதுவரை அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர். தவெகவிற்கு பெரும்பான்மை இல்லாததால், குதிரை பேரத்தில் ஈடுபட்டு பிற கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவதாக திமுக மற்றும் அதிமுக குற்றம் சாட்டி வருகின்றன. ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குதிரை பேரம் நடைபெற்றதா? என்று விசாரிக்க வேண்டும் என்று அதிமுக எம்பி இன்பதுரையும் கூறியிருந்த நிலையில், வெங்கட நாராயாணா சந்தித்து பேசியிருக்கிறார்.
கடந்த வாரம் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டார். முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளாரான வெங்கட நாராயணா கடத்கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்று கூறி எதிர்க்கட்சிகள் இவரது நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அவரது நியமனத்தை விஜய் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.