தமிழக செய்திகள்

கவர்னர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு - சு. வெங்கடேசன் எம்.பி.

கவர்னர் மாளிகை நேரடியாக தலையிடும் என்று கூறுவதன் நோக்கம் பிரச்சினையை தீர்ப்பதற்கல்ல என சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்.பி. தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

தமிழக கவர்னர் வைகை ஆற்றைக் கடக்கும்போது, ஆற்றில் நீர் இல்லாததைக் கண்டு வேதனையுற்று, "உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளாவிட்டால், கவர்னர் மாளிகையே நேரடியாக களத்தில் இறங்கும்” என்று கூறியுள்ளார்.

களத்தில் இறங்க வேண்டிய தேவை

கவர்னர் அவர்களே, கடந்த வாரம் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்ற சென்றபோது, கூவம் ஆற்றை கடந்துதானே சென்றீர்கள்? அங்கே ஆற்று நீர் தெள்ளத்தெளிவாகவா ஓடிக்கொண்டிருந்தது? அங்கு கவர்னர் மாளிகை களத்தில் இறங்க வேண்டிய தேவை ஏதும் ஏற்படவில்லையா?

கவர்னர் மாளிகை நேரடியாக தலையிடும் என்று நீங்கள் கூறுவதன் நோக்கம் பிரச்சினையை தீர்ப்பதற்கல்ல, மாறாக ஓர் இணையாட்சி நிர்வாகத்தை உருவாக்கவே. கவர்னர்களின் அரசியல் நோக்கங்களை முறியடித்த வரலாறு கொண்டதுதான் தமிழ்நாடு. சந்தேகம் ஏதும் இருந்தால் ஆர் என் இரவியிடம் கேட்டுப்பாருங்கள்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.