தமிழக செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் - பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தனிநபர் பிரிவில் தமிழக வீரர் குகேஷ் தங்கம் வென்றார் பிரக்ஞானந்தாவுக்கு வெண்கலம் கிடைத்து உள்ளது.

சென்னை:

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் இந்தியா மொத்தம் 6 அணிகளை களம் இறக்கியுள்ளது.

கடந்த 10 நாட்களுக்கு மேலாக பிரம்மாண்டமாக நடைபெற்று வந்த செஸ் ஒலிம்பியாட்டின் கோலாகலமான நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது. இறுதி நாளான இன்று இந்திய அணி 2 வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளது.

செஸ் ஒலிம்பியாடில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவிலும் வெண்கலப் பதக்கம் வென்று இந்திய அணி அசத்தியுள்ளது. இந்நிலையில், ஆடவர் இந்தியா பி அணியில் இடம்பெற்றுள்ள பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹல் சரின், எரிகேசி அர்ஜுன் ஆகியோர் விளையாடினர்.

இதில் தமிழக வீரர் குகேஷ், நிகில் சரின் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், எரிகேசி அர்ஜுன் வெள்ளி வென்றார். பிரக்ஞானந்தா வெண்கலம் வென்றார். தனிநபர் பிரிவில் வைஷாலி, தானியா சச் தேவ், திவ்யா தேஷ்முக் ஆக்யோரும் வெண்கலம் வென்று அசத்தினர்.

SCROLL FOR NEXT