தமிழக செய்திகள்

வாரந்தோறும் புதன்கிழமை அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு ஊழியர்கள் மோட்டார் வாகனங்களில் பணிக்கு வரக்கூடாது

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய பணியாளர்கள் வாரந்தோறும் புதன்கிழமை அன்று மோட்டார் வாகனங்களில் பணிக்கு வரக் கூடாது என்றும், சைக்கிள் அல்லது பொது போக்குவரத்து மூலம் வரலாம் என்றும் அதன் தலைவர் ஏ.உதயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைவரான ஐ.எப்.எஸ். அதிகாரி ஏ.உதயன் ஊழியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காற்று மாசு, சுகாதாரத்துக்கு பெரும் சுற்றுச்சூழல் ஆபத்து என்பதும் அதனால் உலக அளவில் ஆண்டுக்கு 20 லட்சம் மக்கள் அகால மரணம் அடைகின்றனர் என்பதும் தாங்கள் அனைவரும் அறிவீர்கள். படிம எரிபொருள் பயன்படுத்துவதால் உருவாகும் வாகன மாசு நகரங்களில் காற்று மாசு ஏற்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் பெரும் நகரங்களில் காற்று மாசில் 72 சதவீதம் வாகன மாசு உள்ளது என கணக்கீடு செய்து மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அனுமானித்தது.

வாகனங்களில் எரிக்கும் செயல்முறையின் போது வெளியேறும் கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, ஹைட்ரோகார்பன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நுண்துகள்கள் மனித சுகாதாரத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கிறது.

பசுமை முயற்சிகள்

கிளாஸ்கோவில் சமீபத்தில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் உலகின் 3-வது பெரிய பசுமை இல்ல வாயு வெளியேற்றியான இந்தியா, பருவநிலை மாற்ற விளைவுகளால் எதிர்கொண்ட கடுமையான பாதிப்பினால் தற்போது முதல் 2030-ம் ஆண்டுக்குள் 100 கோடி டன் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதாக அறிவித்தது.

அனைத்து மக்களின் ஒத்துழைப்பு மூலமே இக்கடினமான இலக்கை அடைந்து சாதிக்க முடியும். தமிழ்நாட்டின் சட்டப்பூர்வமான அமைப்பான தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மாசினை கட்டுப்படுத்த பல்வேறு பசுமை முயற்சிகளை முன்னெடுத்து செல்ல வேண்டி உள்ளது.

எனவே தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அனைத்து பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மாசற்ற அலுவலக வாரம்-பயண நாள் என கடைப்பிடித்து தனி நபர் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளது. இம்முயற்சியினால் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலக வளாகத்துக்குள் 20 சதவீதம் காற்று மாசு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையாளர்களும்..

இதே போன்று பிற அலுவலகத்துக்கு செல்வோர்களும் இப்பசுமை முயற்சியில் இணைந்து கொள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஒரு முன் உதாரணமாக விளங்கும்.

வாரிய அலுவலகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களையும் புதன்கிழமை அன்று மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு ஊக்குவிக்கலாம். இது ஒரு சிறு படியென்றாலும் சுற்றுச்சூழலை காக்கும் பயணத்தின் தொடக்கம் ஆகும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதன்கிழமை

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், முதல்-அமைச்சர் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் ஆய்வுக்கூட்டத்தின்போது, தமிழகத்தில் பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தமிழகத்தில் காற்றுமாசுவை குறைத்து, பசுமை தமிழகமாக மாற்றும் முயற்சியில் முதல் கட்டமாக வாராந்திர மாசு இல்லாத அலுவலக பயண நாள் என்ற வகையில் சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் 17-ந்தேதி (நாளை) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று வாரிய அலுவலகத்துக்கு வருவதற்கு தனிப்பட்ட வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்து அல்லது நடைபயணமாக அல்லது சைக்கிள் அல்லது மின்சார சைக்கிள்/ வாகனங்களை பயன்படுத்துவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை