தமிழக செய்திகள்

மியான்மரில் சிக்கிய தமிழக இளைஞர்கள் மீட்பு: துரை வைகோ எம்.பி.க்கு நன்றி

கம்போடியாவிற்கு வேலைக்குச் சென்ற இடத்தில் கடத்தப்பட்டு, மியான்மரில் சித்திரவதைக்குள்ளான 3 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தூத்துக்குடி பெரியசாமிநகரைச் சேர்ந்த சித்திரைசெல்வகுமார், நவீன்குமார் மற்றும் விருதுநகர் சிப்பிப்பாறையைச் சேர்ந்த மதன்ராஜ் ஆகிய 3 பேரும் கடந்த 11.10.2025 அன்று வேலைக்காக கம்போடியா சென்றனர்.

அவர்கள் தாய்லாந்து வழியாக மியான்மருக்கு கடத்தப்பட்டு, தீவிரவாதக் குழுக்களால் சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இதுகுறித்து துரை வைகோ எம்.பி.யிடம் பெற்றோர்கள் முறையிட்டனர். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.

இந்தியத் தூதரகத்தின் தொடர் முயற்சியால் 3 பேரும் மீட்கப்பட்டனர். ஊர் திரும்பிய இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், துரை வைகோ எம்.பி.யை நேரில் சந்தித்து தங்களது நெகிழ்ச்சியான நன்றியைத் தெரிவித்தனர்.