சென்னை,
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டு முதல் கூட்டம் கடந்த மாதம் 20-ம் தேதி தொடங்கியது. கவர்னர் ஆர்.என்.ரவி, அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் பேரவையை விட்டு வெளியேறினார். தொடர்ந்து கவர்னர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். உரையை கவர்னர் வாசித்ததாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர், கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 22-ம் தேதி தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 24-ம் தேதி பதில் அளித்தார். இதையடுத்து, மறுதேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து 2026-27-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், இந்த இடைக்கால பட்ஜெட்டில் வழக்கமான நிதி ஒதுக்கீடுகள் மட்டுமின்றி, மக்களைக் கவரும் பல முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுகிறது.
20-ம் தேதி 2026-27-ம் ஆண்டுக்கான முன்பண மானிய கோரிக்கையும், 2025-26-ம் ஆண்டுக்கான கூடுதல் செலவின மானிய கோரிக்கையும் தாக்கல் செய்யப்படுகின்றன. நாளை தொடங்கும் சட்டசபை கூட்டம் 20-ம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று மாநிலத்தின் 2வது பொருளாதார அறிக்கை வெளியாக உள்ளது. 2025-ல் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 11.2% வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், பொருளாதார வளர்ச்சி, விவசாயம், தொழில் துறை, வேலைவாய்ப்பில் கடந்தாண்டு தமிழ்நாட்டின் வலுவான சாதனைகளை இந்த அறிக்கை கோடிட்டுக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.