சென்னை,
நடப்பாண்டு 'நீட்' தேர்வு முடிவில் முதல் 100 இடங்களில் தமிழக மாணவர்கள் 9 பேர் இடம் பெற்று சாதனை படைத்திருக்கின்றனர்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. 2026-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 3-ந்தேதி நடத்தப்பட்ட நிலையில், அதில் வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு கடந்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 19 லட்சத்து 99 ஆயிரத்து 895 பேர் எழுதியதில், 11 லட்சத்து 21 ஆயிரத்து 185 பேர் வெற்றி பெற்றிருக்கின்றனர்.
மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடந்த இந்த தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 மாணவ-மாணவிகள் இடம் பெற்று இருக்கின்றனர். முதல் 100 இடங்களில் வெங்கடபதி வேலாயுதம் (அகில இந்திய அளவில் 12-வது இடம்), ஸ்ரீனிகா (27-வது இடம்), சுடர் (45-வது இடம்), வனிஷா சதீஷ் (51-வது இடம்), சபரி (59-வது இடம்), ஜெய்கிருஷ்ணா (75-வது இடம்), சாம்விதா (82-வது இடம்), நவீதனா (88-வது இடம்), நிகில் சிவானந்தன் (92-வது இடம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இது முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், டாப்-100-ல் இடம்பெறும் தமிழக மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து நீட் தேர்வை தமிழக மாணவ-மாணவிகள் எழுதி வருகிறார்கள். அந்த ஆண்டில் முதல் 100 இடங்களில் ஒரு மாணவர் கூட இடம்பெறவில்லை. அதற்கு அடுத்த ஆண்டில் (2018) கீர்த்தனா என்ற மாணவி 12-வது இடத்தில் வந்தார். அந்த ஆண்டில் ஒருவர்தான் இடம் பெற்றார்.
2019-ல் சுருதி என்ற ஒரு மாணவி மட்டும் இடம் பெற்றிருந்தார். அதே போல், 2020-ல் ஸ்ரீஜன், மோகனபிரபா ரவிச்சந்திரன், சுவேதா ஆகிய 3 பேர் இடம் பெற்றனர். 2021-ல் கீதாஞ்சலி, பிரவீன், பிரசென்ஜித், அரவிந்த் ஆகிய 4 பேரும், 2022-ல் திரிதேவ் விநாயகா, ஹரிணி ஆகிய 2 பேரும், 2023-ல் பிரபஞ்சன், கவுஸ்தவ்பவுரி, சூரியா சித்தார்த், வருண், சாமுவேல் ஹரிஷித், ஜேக்கப் பவின் ஆகிய 6 பேரும், 2024-ல் சையத் ஆரிபின் யூசுப், சைலஜா, ஆதித்யா குமார் பாண்டா, ஸ்ரீராம், ரஜனீஷ், ஜெயதி பூர்வஜா, ரோஹித், சபரீசன் ஆகிய 8 பேரும் இடம் பெற்றிருந்தனர்.
கடந்த ஆண்டில் (2025) சூரிய நாராயணன், அபிநீத் நாகராஜ், புகழேந்தி, ஹிருத்திக் விஜய் ராஜா, ராகேஷ், பிரஜன் ஸ்ரீவாரி ஆகிய 6 பேரும் இடம் பெற்றிருந்த நிலையில், 2026-ல் இந்த எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.