சென்னை,
கடந்த 1973-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்த முதல் பெண் காவலர் என்ற பெருமையை பெற்றவர் சிசிலி. 1977-ஆம் ஆண்டு தமிழகத்தின் இரண்டாவது பெண் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றார்.
தனது பணிக்காலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றங்களை தடுப்பதிலும் மிக சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்து உயரிய விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவின் ஆய்வாளராக பணியாற்றி, கடந்த 2005-ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் சிசிலி வயது மூப்பு காரணமாக வீட்டில் இருந்த நிலையில், அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு அவருடன் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளும் பொதுமக்களும் இரங்கல் தெரிவித்தனர்.
மறைந்த சிசிலிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.