திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க 17 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், விஜயபாஸ்கர் மற்றும் வளர்மதி உள்ளிட்டோர் அடுத்தடுத்து நிகழ்விடத்திற்கு வந்து பணியை துரிதப்படுத்தினர்.
இந்நிலையில் சிறுவன் சுர்ஜித்தை பத்திரமாக மீட்க #SaveSujith #PrayforSujith என்ற ஹேஸ்டேக்கில் பொதுமக்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்
மணலால் மூடப்பட்ட நிலையில் ஆழ்துளை கிணற்றில் அசைவின்றி குழந்தை சுர்ஜித் இருக்கிறான். இடுக்கி போன்ற கருவி மூலம் மண்ணை அகற்றிவிட்டு குழந்தையை மீட்கும் முயற்சி தீவிரமாக நடைபெறுகிறது.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது கூறியதாவது:-
குழந்தையை மீட்க இந்த நிமிடம் வரை போராடிக் கொண்டிருக்கிறோம். உயர்நிலை வல்லுநர்கள் அனைவரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
முதலில் சிறுவனின் அழுகுரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. சிசிடிவி காமிரா மூலம் கண்காணித்துக் கொண்டே கயிறை இறக்கினோம்.
ஒரு நிமிடம் கூட தங்குதடையின்றி குழுவினர் அனைவரும் போராடி வருகின்றனர். கயிறு கட்டி மேலே இழுக்கும் முயற்சி 3 முறை நழுவிவிட்டது.
கையில் கட்டியிருந்த கயிறு உருவி, சிறுவன் நழுவி 70 அடி ஆழத்திற்கு சென்றுவிட்டான். 70 அடி ஆழத்திற்கு சிறுவன் சென்றாலும் சிறுவன் மூச்சுவிடும் ஓசை தொடர்ந்து கேட்டது.
ஐஐடியினர் வழங்கிய கருவி மூலம் மீட்பு முயற்சி நடைபெற்றது. ஆக்சிஜன் தொடர்ந்து அதிகபட்சமாக செலுத்திக் கொண்டேயிருக்கிறோம்.
முதலமைச்சர் உள்ளிட்டோர் நிலவரத்தை கேட்டறிந்தார்கள். அதிகாலையில் சிறிதளவு மண் விழுந்து மூடியதால் பின்னடைவு ஏற்பட்டது.
மீட்புப் பணி சவாலாக உள்ளது. 70 அடி ஆழத்தில் சிறிய இடைவெளி கூட இல்லாமல் பையன் இறுகியுள்ளான்.
சிறுவனைச் சுற்றி சிறிதுகூட இடைவெளி இல்லாமல் இருப்பதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. இந்த நிமிடம் வரை நம்பிக்கையோடு போராடிக் கொண்டிருக்கிறோம்.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வந்து கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த மருத்துவமனையே இங்கு தயாராக உள்ளது.
சிறுவன் மூர்ச்சையாகி மயக்க நிலையில் வந்தாலும் விரைந்து செயலாற்ற மருத்துவக் குழு தயாராக உள்ளது. மண் விழுந்தது, ஈரப்பதம் ஆகியவை மிகப்பெரிய சவாலாக உள்ளன.
நல்ல சத்தம் கொடுத்துக் கொண்டிருந்த பையனிடமிருந்து, அதிகாலை 5.30 மணிக்குப் பிறகு சத்தம் வரவில்லை என கூறினார்.