சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் மீது கஞ்சா போதையில் இருந்த கும்பல் பட்டாக்கத்தியால் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கின்றது. படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் பாதிக்கப்பட்ட பெண், முழு மன மற்றும் உடல் நலத்துடன் கூடிய விரைவில் குணமடைந்து வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
"போதையில்லா தமிழகம் உருவாக்குவோம்” என்று உறுதிமொழி எடுத்து ஆட்சிக்கு வந்த மு.க.ஸ்டாலின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில், தெருவுக்குத் தெரு டாஸ்மாக்கும், பெட்டிக்கடைதோறும் கஞ்சாவும் பெருகியுள்ளது. தலைவிரித்தாடும் போதைப் பழக்கத்தால் பெண்களின் பாதுகாப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துள்ளது. ஆனால், திமுக அரசோ கொஞ்சம் கூட கூச்சமேயில்லாமல் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்று விளம்பர விழா எடுத்துக் கொண்டிருக்கிறது.
அதுசரி, பெண்களைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்களையும், பாலியல் ரீதியாக வேட்டையாடுபவர்களையும் தனது கட்சி நிர்வாகிகளாக அமர்த்தி அழகு பார்க்கும் திமுகவிடம் பெண்களின் பாதுகாப்பையும் பெண்களுக்கான மரியாதையையும் எதிர்பார்க்க முடியுமா? திமுகவைத் தமிழக அரசியலில் இருந்து ஒழித்தால் மட்டுமே பெண்களின் பாதுகாப்பு நிலைநிறுத்தப்படும்!
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.