தமிழக செய்திகள்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

மக்களின் தீர்ப்பே உயர்ந்தது, அதனை மதிப்பதே ஜனநாயகத்திற்கு உண்மையான மரியாதை என ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழக மக்களின் பேராதரவை பெற்று, வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்காமல் காலதாமதம் செய்வது ஜனநாயக மரபுகளுக்கும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான செயல் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து, ஜனநாயகத்தின் அடிப்படை பெரும்பான்மை ஆதரவு பெற்ற தலைமையினரை ஆட்சி அமைக்க அழைப்பது கவர்னரின் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பாகும். அந்த பொறுப்பில் கவர்னர் சரியான முறையில் செயல்பட வேண்டியது அவசியம்.

தமிழக மக்களின் ஜனநாயக உரிமையைப் புறக்கணிக்காமல், அரசியலமைப்புச் சட்ட மரபுகளையும், ஜனநாயக நெறிமுறைகளையும் உடனடியாக பின்பற்றி, மக்கள் விருப்பத்திற்கேற்ப ஆட்சி அமைக்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

மக்களின் தீர்ப்பே உயர்ந்தது, அதனை மதிப்பதே ஜனநாயகத்திற்கு உண்மையான மரியாதையாகும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.