தமிழக செய்திகள்

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: டீ மாஸ்டருக்கு 16 ஆண்டுகள் சிறை

நெல்லை பேட்டை செக்கடி பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் ஒருவர், 6 மற்றும் 7 வயதுடைய 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

திருநெல்வேலி,

நெல்லை அருகே பேட்டை செக்கடி பகுதியை சேர்ந்த முத்துகுமார் (வயது 41), அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2024-ம் ஆண்டு, 6 மற்றும் 7 வயதுடைய 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து முத்துகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கு நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார் நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட முத்துகுமாருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.1 லட்சம் அரசு இழப்பீடாக வழங்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் உஷா ஆஜராகி வாதாடினார்.