கோவை,
திண்டுக்கல்லை சேர்ந்தவர் பாபு (வயது 34). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடன் அந்த பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் சிலர் நெருக்கமாக இருந்து உள்ளனர். இந்த நிலையில் அந்த ஆசிரியர், தன்னுடன் நெருக்கமாக இருந்த சில மாணவர்களுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அதை பார்த்து மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் அனைவரும் அந்தப்பள்ளிக்கூடத்துக்கு சென்று நிர்வாகிகளிடம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த ஆசிரியர் மாணவர்களுக்கு செல்போன் மூலம் ஆபாச படம் அனுப்பியது உறுதியானது. இது குறித்த புகாரின் பேரில் கோவை கிழக்கு மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாபுவை கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, கோடைக்கால விடுமுறையில் மாணவர்கள் வீட்டில் இருந்து உள்ளனர். அப்போது அந்த ஆசிரியர் கடந்த 2 மாதங்களாக மாணவர்களுக்கு வாட்ஸ்-அப்பில் ஆபாச படங்களை அனுப்பி உள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனர்.