சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
“இந்திய குடியரசின் முன்னாள் தலைவரும், தலைசிறந்த கல்வியாளருமான டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழும் ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்கால இந்தியாவின் தூண்களான மாணவச் செல்வங்களுக்கு தரமான கல்வியை வழங்குவதோடு, நேர்மை, பொறுப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி, மனிதநேயம் போன்ற சிறந்த பண்புகளையும், சமூகச் சிந்தனைகளையும் கற்பிப்பதில் ஆசிரியர்களின் பங்கு அளப்பரியது.
மாணவச் செல்வங்களிடையே அறிவை விதைத்து, ஒழுக்கத்தை வளர்த்து, வெற்றியை அறுவடை செய்யும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்கள் அனைவரின் கல்விப் பணி மென்மேலும் சிறந்தோங்கிட வேண்டும் எனக் கூறி, ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.