தமிழக செய்திகள்

குழந்தைகளை நினைத்து... வயநாடு நிலச்சரிவில் உயிர்தப்பிய மதுரை தம்பதி கண்ணீர் பேட்டி

நிலச்சரிவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பலர் மண் குவியலுக்கு சிக்கினர்.

சென்னை,

வயநாடு நிலச்சரிவு

வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் நேற்று முன்தினம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் மீனாட்சி பாலத்தை கடந்தவாறு டேங்கர் லாரி அடித்து வரப்பட்டது. இதை கண்ட பலர் அங்கிருந்து தப்பி ஓடினர். இருப்பினும், நிலச்சரிவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பலர் மண் குவியலுக்கு சிக்கினர்.

இதில் அடித்து வரப்பட்ட டேங்கர் லாரிக்கு அடியில் சிக்கி தமிழகத்தின் மதுரை பகுதியை சேர்ந்த பால்ராஜ், கூடம்மா தம்பதி காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவானது. இதுதற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பியது குறித்து பால்ராஜ், கூடம்மா தம்பதி கூறியதாவது:-

எஸ்டேட் தொழிலாளர்கள்

எனது தந்தை காலத்தில் மதுரையில் இருந்து வயநாட்டுக்கு குடிபெயர்ந்தேன். நான் வயநாட்டில் பிறந்து வளர்ந்தேன். கூட லூர் அருகே உள்ள தேவர்சோலை அரசு மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்தேன். எனது மனைவிக்கு மதுரை திருமங்கலம் சொந்த ஊராகும். 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதால், குடும்பத்துடன் வயநாட்டில் வசித்து வருகிறோம்.

மேப்பாடி அருகே 6 கி.மீ. தொலைவில் மீனாட்சி என்ற இடத் தில் தனியார் எஸ்டேட்டில் தொழிலாளர்களாக பணியாற்றி வருகிறோம். மீனாட்சியில் இருந்து மேப்பாடிக்கு செல்வதற்காக நாங்கள் பாலம் பகுதிக்கு வந்தோம். அப்போது சற்று தூரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் இருந்து நிலச்சரிவு ஏற்படுவதை பார்த்தோம். முழு மலையுமே சரிந்து வருவது போல் இருந்தது.

லாரி குறுக்கே வந்ததால்...

அப்போது சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த டேங்கர் லாரியையும் அடித்துக்கொண்டு மண்சரிவு வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் வேகமாக ஓடத்தொடங்கினோம். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் நிலச்சரிவு வந்து மூடியதில் பலர் சிக்கினர். மண் சரிவில் டேங்கர் லாரியும் அடித்து வரப்பட்டு அங்கு நிறுத்தி இருந்த ஜீப் மீது மோதி குறுக்கே வந்து நின்றது. இதனால் தப்பி ஓடி வந்த நானும், எனது மனைவியும் அதிர்ஷ்டவசமாக தப்பினோம்.

ஆனாலும் எனது மனைவி லாரிக்கு அடியில் சேற்றில் சிக்கினார். உடனே நான் அவரின் கையை பிடித்து தூக்கி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துக் கொண்டு ஓடினேன். இதனால் காயங்களுடன் உயிர் தப்பினோம்.இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நிலச்சரிவு ஏற்பட்டதை பார்த்ததும் எங்களது குழந்தைகளை நினைத்துக்கொண்டு வேகமாக ஓடி னோம். அதிர்ஷ்டவசமாக லாரியும் குறுக்கே வந்து நின்றதால் உயிர்பிழைத்தோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.