திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு இண்டிகோ, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகிறது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருச்சி விமான நிலையத்தில் இன்று மாலை 6:43 மணிக்கு 126 பயணிகளுடன் இண்டிகோ விமானம் சிங்கப்பூர் நோக்கி புறப்பட்டது. இந்த விமானம் சுமார் 20 நிமிட நேரம் வானில் பறந்த பிறகு விமானத்தில் தொழில் நுட்ப கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது இதனை அறிந்த விமானி உடனடியாக திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறிக்கை தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அந்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டு உடனடியாக திருச்சி விமான நிலையத்திற்கு வருமாறு கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை நெருங்கிய பிறகு சுமார் 20 நிமிடம் வானில் வட்டமடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் பீதி அடந்தனர்.
அந்த விமானம் சரியாக இரவு 9.02 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது இதனால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து பொறியியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் விமானத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படுவது குறித்து விமான நிறுவனத்தினர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.