தேனி அருகே டொம்புச்சேரியை சேர்ந்த பாண்டியராஜன் மகள் ரேவதி (வயது 22). இவரும், அதே ஊரைச் சேர்ந்த மகாராஜன் மகன் செல்லபாண்டி என்பவரும் 3 ஆண்டு காலமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு பேசாமல் இருந்து வந்தனர். இந்நிலையில், ரேவதியின் செல்போனுக்கு செல்லபாண்டி அழைத்து தன்னுடன் பேசுமாறு கூறினார். இதை தனது செல்போனில் ரேவதி பதிவு செய்து செல்லபாண்டியின் தாய் ராக்கம்மாளிடம் காண்பிக்க சென்றார். அப்போது அவரும் சிலரும், செல்போனை பிடுங்கி உடைத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், ரேவதி மனம் வெறுத்து எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில், ராக்கம்மாள் உள்பட 3 பேர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.