தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள நடுகாளான்குடியிருப்பு கிராமம் மேலத் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகன் சிவனேஷ் (வயது 19). இவர் எந்த வேலைக்கும் செல்லாமல், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது தந்தை ஸ்ரீதர் தொடர்ந்து கண்டித்து, ஒழுங்காக வேலைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தந்தை தன்னைத் திட்டி கண்டித்ததால் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனையிலும், மனமுடைந்த நிலையிலும் சிவனேஷ் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் இச்சம்பவத்தின் தொடர்ச்சியாக ஜே.ஜே.நகர் காட்டுப் பகுதிக்குச் சென்ற சிவனேஷ், அங்கு தான் மறைத்து வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மெஞ்ஞானபுரம் காவல் துறையினர் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த சிவனேஷின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.