தமிழக செய்திகள்

சென்னையில் பறக்கும் ரெயில் மோதி வாலிபர் பலி

சென்னை லைட் ஹவுஸ் ரெயில் நிலையத்தில் வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற பறக்கும் ரெயில் மோதி படுகாயம் அடைந்தார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் கபாலி. இவருடைய மகன் சங்கர் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 27-ம் தேதி சங்கர், சென்னை லைட் ஹவுஸ் ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றபோது, கடற்கரையில் இருந்து வேளச்சேரி நோக்கி சென்ற பறக்கும் ரெயில் மோதி படுகாயம் அடைந்தார்.

திருவான்மியூர் ரெயில்வே போலீசார் சங்கரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.