திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டத்தில், 12 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தாக்குதல் செய்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்து.
திருநெல்வேலி மாவட்டத்தில் சுபாஷ் (வயது29) என்பவர் 12 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் 17.10.2022 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உவரி காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு, அந்த வாலிபரை கைது செய்தார்.
புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து, வழக்கின் விசாரணையானது, திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அந்த வாலிபருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நீதிபதி சுரேஷ்குமார் இன்று (7.08.2026) குற்றவாளிக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
3(a) r/w 4 POCSO Act-ன்படி 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம். IPC 366-ன்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம். மேற்சொன்ன தண்டனைகளை குற்றவாளி ஏககாலத்தில் (Concurrent) அனுபவிக்க நீதிபதி அவர்கள் தனது தீர்ப்பில் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.
இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணை நடைபெற சிறப்பாக கண்காணிப்பு செய்த ஏ.டி.எஸ்.பி. சண்முகம் (CWC), வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், உவரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் வழக்கினை திறம்பட புலன் விசாரணை செய்த அப்போதைய உவரி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேமா (தற்போது விஜயநாராயணம் காவல் நிலையம்) வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த தலைமை காவலர் அஜய்குமார், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. விஷ்வேஷ் பா.சாஸ்திரி பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் தீவிர நடவடிக்கையால் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 16 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 16 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் 1 குற்றவாளிக்கு மரண தண்டனையும், 4 குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனையும், 2 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும், 1 குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. தெரிவித்துள்ளார்.