தமிழக செய்திகள்

இணையதளத்தில் கோவில் சொத்து ஆவணம்: ஜக்கி வாசுதேவ் வரவேற்பு

கோவில் சொத்துகள் குறித்த ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற இந்து சமய அறநிலையத்துறையின் முடிவிற்கு ஈஷா வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கிவாசுதேவ் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-

அறநிலையத்துறைக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள் - சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அந்த டுவீட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோரை பகிர்வு செய்துள்ளார். ஜக்கிவாசுதேவ், கோவில் அடிமை நிறுத்து என்ற இயக்கத்தின் மூலம் அறநிலையத்துறையின் வரவு, செலவு கணக்குகளை வெளி தணிக்கை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்க வேண்டும், கோவில்களுக்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் நிலங்களுக்கு தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடகை நிர்ணயித்து, அதை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தார்.

SCROLL FOR NEXT