தமிழக செய்திகள்

தென்காசி: தோட்டத்தில் பதுக்கிய 850 மதுபாட்டில்கள் பறிமுதல்!

17 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 850 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தென்காசி,

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, ஏப்ரல் 21 முதல் 23, 2026 வரை மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருக்கும். இந்த நாட்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியில் எலுமிச்சை தோட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், நள்ளிரவில் சேந்தமரம் போலீசார் அந்த எலுமிச்சை தோட்டத்துக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது தோட்டத்தில் 17 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 850 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக நொச்சிகுளத்தைச் சேர்ந்த திசை வீரபாண்டியன் மகன் இளையபாண்டியன் (வயது 40) என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.