தென்காசி
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நீர்வரத்து இன்று சீரான நிலையில் மெயின் அருவி, ஐந்தருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
குற்றால அருவிகளில் கடந்த சில வாரங்களாக நீர்வரத்து மிகக்குறைந்த அளவிலேயே இருந்தது. இதற்கிடையே, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த 30-ந்தேதி அருவிகளில் நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அன்று மாலையில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனையடுத்து, குற்றாலம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மழை பெய்தது. இதனால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர்மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க 2வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. இதனால், விடுமுறை நாளில் ஆவலுடன் நீராட வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், குற்றாலத்தில் நீர்வரத்து இன்று சீரானது. இதனால், 2 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இதன்படி, தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், சுற்றுலாவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.