தமிழக செய்திகள்

தென்காசி துப்பாக்கி சூடு சம்பவம்: பாதிக்கப்பட்ட மணிகண்டன் பெற்றோருக்கு சீமான் ஆறுதல்

மணிகண்டனுக்கு உரிய நீதியை பெற்று தரவும் இறுதிவரை நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என உறுதியளித்து சீமான் ஆறுதல் தெரிவித்தார்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மருதம்புத்தூர் பகுதியை சேர்ந்த பனை தொழிலாளி மணிகண்டன். இவர் பனை மரத்தில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்வதாக கூறி கடந்த ஏப்ரல் 7-ம் தேதி சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பனை தொழிலாளியை சப் இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

ஆலங்குளத்தில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பிரசார கூட்டத்திற்கு நேரில் வந்தனர். அங்கே தங்கள் மகனுக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கண்ணீர் மல்க அவர்கள் வேதனையை தெரிவித்தனர்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜாவால் சிறிதும் மனிதத்தன்மையற்று துப்பாக்கியால் சுடப்பட்ட தம்பி மணிகண்டனின் உடல்நிலை கண்டு பெருந்துயருற்றுள்ள தம்பியின் பெற்றோர் ஆலங்குளத்தில் பிரசார கூட்டத்திற்கு வந்து தங்கள் வேதனையை தெரிவித்தனர்.

சங்க காலம் தொட்டு தமிழ் மக்களின் பயன்பாட்டில் உள்ள கள் இறக்கும் உரிமையை மீட்கவும், பனை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்கவும், தம்பி மணிகண்டனுக்கு உரிய நீதியை பெற்று தரவும் இறுதிவரை நாம் தமிழர் கட்சி துணை நிற்கும் என உறுதியளித்து ஆறுதல் தெரிவித்தேன்.

இவ்வாறு அதில் தெரிவித்தார்.