தென்காசி,
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே மதுபோதையில் சுடுகாட்டில் தொழிலாளியை அடித்துக்கொலை செய்த, அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சாம்பவர்வடகரை இல்லத்தார் தெருவைச் சேர்ந்தவர் சத்தியன் (வயது 35). இவரது நண்பர்கள் அதே பகுதி மாதாகோவில் தெருவை சேர்ந்த கருப்பசாமி(35), உலைக்கூட தெருவை சேர்ந்த சுப்பிரமணியன்(35). இதில் சத்தியன், சுப்பிரமணியன் ஆகியோர் கேரளத்தில் கூலித்தொழிலாளர்களாகவும், கருப்பசாமி உள்ளூரில் சமையல் மாஸ்டராகவும் வேலை பார்த்தனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன் சத்தியன், சுப்பிரமணியன் ஆகியோர் ஒருவரின் திருமணத்திற்காக சொந்த ஊருக்கு வந்தனர். நேற்று மாலையில் சத்தியன், சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் சாம்பவர்வடகரை மெயின் ரோட்டில் உள்ள சுடுகாட்டு நிழல்தாங்கலில் அமர்ந்து மதுக்குடித்தனர்.
அப்போது, மதுபோதையில் அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் வாக்குவாதம் முற்றியதில் சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் சேர்ந்து சத்தியனை கைகளால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து உடனடியாக சாம்பவர்வடகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சத்தியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுப்பிரமணியன், கருப்பசாமி ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். சுரண்டை அருகே சுடுகாட்டில் தொழிலாளியை அவரது நண்பர்களே அடித்துக்கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.