தமிழக செய்திகள்

சென்னை சோழிங்கநல்லூரில் பயங்கர தீ விபத்து - ஐ.டி. நிறுவன ஊழியர்கள் வெளியேற்றம்

தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

சென்னை,

சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அங்குள்ள காரப்பாக்கம் பகுதியில் அமைந்திருக்கும் தனியார் நிறுவன வளாகத்தில் இன்று எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

காரப்பாக்கம் எல்காட் வளாகத்தின் பின்புற பகுதியில் உள்ள கிடங்கில் திடீரென தீப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் அந்த பகுதி முழுவதும் கரும்புகை பரவியதால், அருகில் இருந்த ஐ.டி. நிறுவன ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் உள்ள ஐ.டி. நிறுவனங்களில் இருந்து ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீ விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.