செங்கல்பட்டு,
பெட்ரோல் போட வந்த இளைஞரை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு சிங்கபெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த வீரா என்ற வீரமுத்துகிருஷ்ணன் (வயது 26). இவர் அப்பகுதியில் பாஸ்ட் புட் கடை நடத்தி வருகிறார். கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திருச்சி - சென்னை பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது 2 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், வீரமுத்துகிருஷ்ணனை வழிமறித்து கையில் வைத்திருந்த ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து ரத்த வெள்ளத்தில் மிதந்து துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி சென்ற மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிங்கபெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஆகாஷ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரமுத்துகிருஷ்ணன் முக்கிய குற்றவாளியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், முன்விரோதம் காரணமாக பழிவாங்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.