தமிழக செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்; டெண்டரை பெற்ற இரண்டு முன்னணி நிறுவனங்கள்

தங்க மோதிரங்களை வழங்குவதற்கான இந்த டெண்டரில் 11 நிறுவனங்கள் பங்கேற்றன.

சென்னை,

அரசு ஆஸ்பத்திரிகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை வாங்குவதற்குத் தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் டெண்டர் கோரியது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.755.83 கோடி செலவிடப்பட உள்ளது. வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திட்டத்தைத் தொடங்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தங்க மோதிரங்களை வழங்குவதற்கான இந்த டெண்டரில் 11 நிறுவனங்கள் பங்கேற்றன. இதில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 0.01 ரூபாய் விலைப்புள்ளியை அளித்து, குறைந்தபட்ச விலைப்புள்ளி நிறுவனமாக முதலிடம் பிடித்துள்ளது. இந்த விலைப்புள்ளி, மோதிரம் தயாரிப்பதற்கான செய்கூலி, பேக்கிங், காப்பீடு, போக்குவரத்து உள்ளிட்ட இதர செலவுகளுக்கானது.

ஒரு கிராம் 22 காரட் தங்கத்துக்கான விலை, ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்ட முறையின்படி தனியாகக் கணக்கிடப்படும். தங்கத்தின் சந்தை விலையில் ஏற்படும் மாற்றத்துக்கு ஏற்ப, அரசால் செலுத்தப்படும் தொகையும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாய் ஆலுக்காஸ் மட்டுமின்றி கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 70 சதவீதமும் கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்திற்கு 30 சதவீதம் டெண்டரை பெற்றுள்ளன