தமிழக செய்திகள்

பாதுகாப்புக்கு ரொம்ப நன்றி: திருச்சியில் போலீசாருக்கு கை கொடுத்துவிட்டு சென்ற விஜய்

விஜய் தனது வாக்கு சேகரிப்பு பணியை முடித்துக்கொண்டு மாலை 5.25 மணி அளவில் விமான நிலையத்திற்கு திரும்பினார்.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் இறங்கி உள்ளது. யாருடனும் கூட்டணி அமைக்காமல் த.வெ.க. தனித்து இந்த தேர்தலை சந்திக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். திருச்சி கிழக்கு தொகுதியில் கடந்த 2-ந்தேதி வேட்பு மனு தாக்கல் செய்த விஜய் அன்றைய தினம் மரக்கடை பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அவர் இரண்டாவது கட்டமாக கடந்த 12-ந்தேதி திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக தேர்தல் ஆணையம் மற்றும் போலீசாரிடமும் அனுமதி பெறப்பட்டு இருந்தது. ஆனால் அன்றயை தினம் விஜய் தர்மபுரி மாவட்டத்தில் பிரசாரத்திற்கு சென்றதால் அவரது பிரசார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் இரண்டாவது கட்டமாக இன்று விஜய், தான் போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சில இடங்களில் ரோடு ஷோ நடத்தி ஆதரவு திரட்டினார்.

இதனை தொடர்ந்து விஜய் தனது வாக்கு சேகரிப்பு பணியை முடித்துக்கொண்டு மாலை 5.25 மணி அளவில் விமான நிலையத்திற்கு திரும்பினார். மாலை 3.25 மணிக்கு ரோடுஷோ நிழ்ச்சியை தொடங்கிய விஜய் 2 மணி நேரத்தில் முடித்து உள்ளார். மாலை 6 மணி அளவில் விஜய் தனி விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு சென்றார். விஜய் ரோடு நிகழ்ச்சிகாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் இருக்க அவரது வாகனத்திற்கு முன்னாலும் ,பின்னாலும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் சுமார் 5 கி. மீ. தூரத்திற்கு ஓடியபடியே இருந்தனர். இந்த நிலையில், விஜய் சென்னை புறப்படும் போது விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கைகுலுக்கி சிறிது நேரம் பேசிவிட்டு சென்றார். திருச்சியில் உரிய போலீஸ் பாதுகாப்பு அளித்ததற்காக போலீசாருக்கு விஜய் நன்றி தெரிவித்து இருக்கலாம் எனத்தெரிகிறது.