சென்னை,
கொலை வழக்கில் கைதாகி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி கைதி படுகொலை செய்யப்பட்டார்.
கோவையை அடுத்த ஆழியார் பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் ஜாகீர் (வயது 27) என்ற இளைஞர் கைதானார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர், மனநலமும் பாதிக்கப்பட்டிருந்ததால் நீதிமன்ற உத்தரவுப்படி பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து மாற்றப்பட்டு, சென்னை கீழ்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஜூலை 20-ந்தேதி, அதே காப்பகத்தில் மற்றொரு குற்றவழக்கில் கைதாகி அரவிந்தசாமி என்ற மனநலன் பாதிக்கப்பட்ட கைதி சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் ஜாகீரை திடீரென கைகளால் கொடூரமாகத் தாக்கினார். மேலும் கண்ணில் குத்தி, காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில் ஜாகீர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.
பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிய ஜாகீரை, காப்பக ஊழியர்கள் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜாகீர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரசு காப்பகத்திற்குள் பாதுகாப்பில் இருந்த கைதி, சக கைதியால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னை வட்டாரத்தில் பெரும் சட்டம் ஒழுங்கு கேள்வியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.