சென்னை,
தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 6 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை ம.தி.மு.க.வுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு உடன்பாடு கண்டது. ம.தி.மு.க.வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில் இன்று காலை திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க ஸ்டாலின்- கேஎஸ் அழகிரி முன்னிலையில் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன் பின்னர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியுடன், தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:-
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக உடனான தொகுதிப் பங்கீடு முழு திருப்தியளிக்கிறது. எதிர்கட்சிகளை இல்லாமல் ஆக்கவே அதிமுகவுடன் பா.ஜ.க கூட்டணி வைத்துள்ளது. ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டு வர பா.ஜ.க திட்டமிட்டுள்ளது. ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி சர்வாதிகார ஆட்சி கொண்டு வர பா.ஜ.க முயற்சி செய்கிறது. அ.தி.மு.க.வை ஒழிக்கவே பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.