சென்னை,
தமிழ்நாடு அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்திருந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கினை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த 2006-2011-ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடியே 1 லட்சத்து 35 ஆயிரம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை 2020-இல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. 2025 ஏப்ரலில், ஐ.பெரியசாமி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டதை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இறுதியாக, லஞ்ச ஒழிப்புத் துறை பதிவு செய்த மூல வழக்கிலேயே முறைகேடுகள் இல்லை என்று கூறி, அதில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி, அமலாக்கத்துறை வழக்கு நிலைக்கத்தக்கதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கை ரத்து செய்தது.