சென்னை,
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை மகிழ்ச்சியுடன் அறிவிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தர்மபுரி மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி வழங்கும் தர்மபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசன திட்டத்தை அறிவிப்பதில் என்ன தயக்கம்?. தர்மபுரி மாவட்டத்தில் 10 அணைகள், 83 ஏரிகள், 769 சிறிய ஏரிகள் உள்பட மொத்தம் 1,230 நீர்நிலைகள் உள்ளன. ஒகேனக்கல் குடிநீர் திட்டப்பகுதியில் மழைக்காலங்களில் கிடைக்கும் உபரி தண்ணீரை குழாய்கள் மூலம் கொண்டு வந்து 1,230 நீர்நிலைகளிலும் நிரப்புவது தான் தர்மபுரி மாவட்ட காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் ஆகும்.
காவிரி உபரிநீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் செழித்து, வேலைவாய்ப்புகளும், பிற வாழ்வாதார வாய்ப்புகளும் ஏற்படும். அதைக் கருத்தில் கொண்டுதான் காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. எனவே தர்மபுரி மாவட்டத்தை செழிப்பாக்குவதற்கான காவிரி உபரிநீர் பாசனத் திட்டத்தை உடனடியாக அறிவித்து, அதற்கான நிதியையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.