சென்னை,
தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் 15-வது சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந்தேதியுடன் முடிவடைகிறது.
இதேபோல், கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் சட்டசபையின் பதவிக்காலம் மேமற்றும் ஜூன் மாதங்களில் நிறைவடைகிறது.
சட்டசபை தேர்தல்
இந்த 5 மாநிலங்களிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
ஏற்கனவே, தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்துக்கு தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் குழு நேரடியாக சென்று, ஆய்வு மேற்கொண்டனர்.
இன்று சென்னை வருகை
அதன் தொடர்ச்சியாக, இன்று (புதன்கிழமை) முதல் 14-ந்தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். அதன்படி, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர், 2 நாள் பயணமாக இன்று காலை டெல்லியில் இருந்து சென்னை வருகின்றனர்.
இந்த குழுவில், தேர்தல் கமிஷனர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ்குமார், பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா, துணை தேர்தல் கமிஷனர் சந்திரபுஷன்குமார், கூடுதல் இயக்குனர் ஜெனரல் சேபாலி சரண், இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவஸ்தவா, செயலாளர் மலே மாலிக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்பு
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று 12.15 முதல் மதியம் 2 மணி வரை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகளை சந்தித்து இந்திய தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசுகிறார். இந்த கூட்டத்தில், அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தே.மு.தி.க., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 10 கட்சிகளின் சார்பில் நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.
கூட்டத்தில், ஒவ்வொரு கட்சி சார்பிலும் 2 நிர்வாகிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனியாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அப்போது, இந்திய தேர்தல் கமிஷனர் சுனில் அரோராவிடம், தங்கள் கட்சியின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக கொடுக்கலாம். மேலும், தலைமை தேர்தல் அதிகாரிக்கு ceo-tamilnadu@eci.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆலோசனை
இன்று மதியம் 3.30 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் இந்திய தேர்தல் கமிஷனர், மாலை 4 மணிக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் (கலெக்டர்கள்) மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தேர்தல் தொடர்பான ஒழுங்குமுறை நிறுவனங்களுடன் இந்திய தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, காலை 11 மணிக்கு தலைமைச்செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை அவர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
புதுச்சேரி பயணம்
பின்னர், மதியம் 1 மணிக்கு இந்திய தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பங்கேற்கும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, இந்த குழுவினர் மாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஹெலிகாப்டர் மூலம் செல்கின்றனர்.
நாளை மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை, அரசியல் கட்சி பிரதிநிதிகளை இந்திய தேர்தல் கமிஷனர் சந்தித்து பேசுகிறார். இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை புதுச்சேரி மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி, போலீஸ் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.
பேட்டி
12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் 11 மணி வரை தேர்தல் தொடர்பான ஏஜென்சி நிர்வாகிகளுடனும், 11.30 மணி முதல் 12.30 மணி வரை தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இந்திய தேர்தல் கமிஷனர் சந்தித்து பேசுகிறார்.
மதியம் 1 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து இந்திய தேர்தல் கமிஷனர் பேட்டியளிக்கிறார். மாலை 4 மணிக்கு புதுச்சேரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை வரும் இந்த குழுவினர், பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து 6.55 மணிக்கு புறப்பட்டு இரவு 8.20 மணிக்கு திருவனந்தபுரத்தை அடைகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?
13 மற்றும் 14-ந்தேதிகளில், கேரள மாநிலத்தில் செய்யப்பட்டு வரும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, மாநில தேர்தல் அதிகாரிகள், உள்ளாட்சி துறைகளை சேர்ந்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளோடு இந்திய தேர்தல் கமிஷனர் ஆலோசனை நடத்துகிறார். இதேபோல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடுகின்றார்.
வழக்கமாக, தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் குழு, தேர்தல் நடத்தவேண்டிய மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்புதான் செல்லும். எனவே, இந்த குழுவினர் டெல்லி சென்றதுடன் தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதிகளை அறிவித்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியல் களம் தலைவர்களின் பிரசாரத்தால் சூடுபிடித்து உள்ள நிலையில் தோதல் அதிகாரிகளின் வருகை காரணமாக பிரசாரம் மேலும் தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.