சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
இன்று “சம்விதான் ஹத்யா திவஸ்” என அரசியல் சாசனத்தை படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரப்படும் நாள், 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசால் அறிவிக்கப்பட்ட அவசரநிலை, குடிமக்களின் அடிப்படை உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை மீது கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது. அந்த காலம், ஜனநாயகத்தின் நுட்பத்தையும் அதன் பாதுகாப்பின் அவசியத்தையும் உணர்த்தும் ஒரு முக்கியமான வரலாற்றுப் பாடமாகும்.
இந்த நாள், அரசமைப்புச் சட்டத்தின் உயரிய மதிப்பையும் ஜனநாயகக் கொள்கைகளின் வலிமையையும் நினைவுபடுத்துகிறது. கடந்த கால அனுபவங்களில் இருந்து பாடம் கற்று, உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாக்கும் பொறுப்பை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது. எதிர்காலத்தில் ஜனநாயக அமைப்புகள் மேலும் வலுப்பெற்று, இத்தகைய சூழ்நிலைகள் மீண்டும் உருவாகாமல் இருப்பது அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.