சென்னை,
சென்னை ஓட்டேரியில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு.
கேள்வி:- அ.தி.மு.க.வில் இருந்து தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இல்லை, என்று கே.சி.பழனிசாமி கூறியுள்ளாரே?
பதில்:- கே.சி.பழனிசாமி தான் கூறிய தன்னிச்சையான கருத்துக்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு இப்படி அவர் கருத்து கூறியிருக்கிறார். இதன்மூலம் அவர் மனதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருப்பது தெரியவருகிறது. கட்சியின் கொள்கைமுடிவுக்குட்பட்ட விஷயங்கள் குறித்து கருத்து கூறுவது என்பது தவறு. கட்சியின் அடிப்படை விதிகளை மீறினால் நடவடிக்கை எடுத்துதான் ஆகவேண்டும்.
கேள்வி:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
பதில்:- காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்துக்குள் அமைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவும் அமைக்கவேண்டும் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அந்த தீர்ப்பு தெளிவாக இருக்கிறது. அந்த காலக்கெடுவும் முடியவில்லை. இன்னும் 14 நாட்கள் உள்ளது. அதற்குள்ளாக அவசரமாக கருத்துக்கூற அவசியம் இல்லையே...
இதுதான் எங்கள் நிலைப்பாடு. தூக்கத்திலும் சரி, தூங்கி எழுந்தபின்பும் சரி இதைத்தான் நாங்கள் சொல்லுவோம்.
கேள்வி:- மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறதே?
பதில்:- நமது எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை 10 நாட்கள் முடக்கி வைத்துள்ளனர். பாராளுமன்றம் வெளியேயும் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. காவிரி விவகாரத்தில் கடுமையாக போராடி வரும் இயக்கம் அ.தி.மு.க. மட்டும் தான். எனவே வழங்கப்பட்ட தீர்ப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். தீர்ப்பை அமல்படுத்த செய்ய மத்திய அரசுக்கு அழுத்தம் தான் தரவேண்டுமே தவிர, இந்த விவகாரத்தில் ராஜினாமா செய்வது சரியில்லை. அது தேவையும் இல்லை.
கேள்வி:- நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
பதில்:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாவிட்டால்... என்ற கேள்வியே வேண்டாம். நேர்மறையான நம்பிக்கையான எண்ணங்கள் தான் வேண்டும். அந்த நம்பிக்கை அடிப்படையில் தான் நமது வாதங்களை அழுத்தம் திருத்தமாக முன்வைத்திருக்கிறோம்.
நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நிலைப்பாடு என்பது கட்சியின் கொள்கை முடிவு. இதை நான் மட்டும் சொல்லிவிடமுடியாது. சரியான நேரத்தில் என்ன முடிவுகளை அறிவிப்பது? என கட்சி முடிவு செய்யும். தனிப்பட்ட யாரும் கருத்துக்கூற முடியாது. சரியான நேரத்தில் அந்த முடிவு வெளியாகும்.
கேள்வி:- பட்ஜெட் விவாத கூட்டத்தின்போது, பிரச்சினைகள் குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் வாதங்களை எப்படி கையாள போகிறீர்கள்?
பதில்:- தெளிவான கொள்கை, திடமான பார்வை. தொலைநோக்கு சிந்தனை கொண்டது தான் அ.தி.மு.க. எனவே எந்த மாதிரியான கேள்விகளையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம். ஆனால் காவடி தூக்கி, கூஜா தூக்கி தமிழகத்தை அடகுவைத்தவர்கள் தான் கேள்விகளுக்கு பயப்படுவார்கள். நாங்கள் பயப்பட அவசியம் இல்லை. நாங்கள் தெளிவாகவும், தூய்மையாகவும் இருக்கிறோம். எங்கள் பாதை அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்து தந்த தெளிவான நீரோடை போன்ற பாதை. மேற்கண்டவாறு அவர் பதில் அளித்தார்.