தமிழக செய்திகள்

நாதகவில் இருந்து களஞ்சியம் விலகல்

கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காவே இருக்காது என இயக்குநர் களஞ்சியம் கூறியுள்ளார்.

சென்னை,

நாதக கட்சியிலிருந்து இயக்குநர் மு.களஞ்சியம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கடிதம் மூலம் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில பொறுப்பு முதல் ஒன்றியம் வரை பல்வேறு நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருகின்றனர். கடந்த மாதம் 3 ஆயிரம் பேர் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் 8 பேர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து மாநில கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த கோ.தமிழரசன் கடந்த 19-ம் தேதி வெளியேறினார்.

இந்தநிலையில், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக இயக்குநர் மு.களஞ்சியம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,

கருத்து வேறுபாடுகளுடன் தொடர்ந்து பயணிப்பது ஆரோக்கியமானதாக இருக்காவே இருக்காது. இயக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம், மாற்றுஅரசியல் தலைவர்கள் மீதான விமர்சனம் வருத்தம் தருகிறது.

நாதக உறுப்பினர்களே சக கட்சியினர், ஆதரவாளர்கள் மீது வெறுப்பரசியலைக் கையாள்வது வருத்தம் அளிக்கிறது .இழிவான விமர்சனங்கள், நாம் முன்னெடுக்கும் தமிழ்த்தேசியப் பண்பாட்டிற்கு உகந்ததல்ல என அதில் கூறியுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் நாதக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.