சென்னை,
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி. இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க., அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ் ஆகியோர் தொடர்ந்த வழக்குகளில், சென்னை, கோவை மாநகராட்சிகளில் ஒப்பந்த பணி வழங்கியதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது.
இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது.
முடித்து வைக்கலாம்
இந்தநிலையில், இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜராக அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. எனவே, இந்த வழக்குகளை முடித்துவைக்கலாம் என்று வாதிட்டார். தி.மு.க. தரப்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோவனும் வழக்கை முடித்து வைக்கலாம் என்றார்.
அறிக்கை வேண்டும்
அறப்போர் இயக்கம் தரப்பில் ஆஜரான வக்கீல் வி.சுரேஷ், டெண்டர் முறைகேடு குறித்து வேலுமணி மீது மட்டும் அல்லாமல், இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டும் என்றார்.
வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சதீஷ் பராசரன், வக்கீல் வி.இளங்கோ ஆகியோர், இந்த வழக்கை எஸ்.பி.வேலுமணி சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளார். அதேசமயம், ஏற்கனவே இந்த புகார் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை. எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு செய்ய தேவையில்லை என்று அரசுக்கு அறிக்கை கொடுத்துள்ளார். அந்த அறிக்கையை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இதுகுறித்து அடுத்த வாரம் விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.